இலங்கையில் பேரினவாத ஆட்சியின் கீழ் வறுமையும் அடக்குமுறைகளும் தலைவிரித்தாடுகின்றன நிலையில் தமிழ் மக்கள் புதுவருட கொண்டாட்டத்தை கொண்டாட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கவலை தெரிவித்தார்.
நேற்று முன்தினம் புதன்கிழமை கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கை ஆட்சியாளர்களினால் தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற நிலையில் புது வருடம் பிறந்துள்ளது.
நாட்டில் தற்போது வறுமை சூழ்ந்து கொண்டிருக்கின்றது பொருட்கள் விலையேற்றம் தேங்காய் எண்ணெயில் மற்றும் பருப்பில் கலப்படம் என உண்ணும் உணவுகளிலேயே நச்சுப் பதார்த்தங்கள் கலக்கப்பட்ட நிலை காணப்படுகிறது.
அரசாங்கத்தினால் புத்தாண்டுக்காகவருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற 5000 ரூபா கொடுப்பனவு கூட புத்தாண்டு தினத்தில் அந்த மக்களுக்கு கிடைக்காத துர்ப்பாக்கிய நிலை காணப்பட்டது.
திட்டமிடாத வகையில் திடீரென அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பனவை தமது அரசியல் நோக்கத்திற்காக வழங்கப்பட்டமையால் மக்கள் இரவிரவாக அரச அலுவலகங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் வடபகுதி மீனவர்கள் அதிலும் குறிப்பாக யாழ் மாவட்ட மீனவர்கள் தமது வாழ்வாதாரத் தொழிலை எண்ணி கலக்கமடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களை யாழ் கடல் எல்லைப் பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பில் வெளியிட்ட கருத்து அத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்களுக்கு பேரிடியாக மாறியுள்ளது.
இலங்கை தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஒருதாய் பிள்ளைகளாக செயற்பாட்டு வரும் நிலையில் அரசியல்வாதிகள் அவர்களை மோத விடுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
ஆகவே இலங்கை அரசாங்கமானது மீனவர்கள் பிரச்சினையில் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுத்து இரு நாட்டு மீனவ மக்களை மோத விடுட்டு வேடிக்கை பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment