Sponsor

Wednesday, July 14, 2021

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பயணித்த பஸ் திருப்பி அனுப்பப்பட்டது......!

 


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வவுனியா  ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.


அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களை ஏற்றிச் சென்றதன் காரணமாக குறித்த பஸ் திருப்பி அனுப்பப்பட்டது. மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை வரும் 19 ஆம் திகதிவரை நடைமுறையில் உள்ளது.


எனினும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய தேவை உடையவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க பஸ் மற்றும் தொடருந்து சேவைகளுக்கு இன்று தொடக்கம் மட்டுப்படுத்தப்பட்டளவில் அனுமதியளிக்கப்பட்டது.


அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு பஸ் ஒன்று கொழும்பு நோக்கிப் பயணித்தது. குறித்த பஸ் வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் சோதனைக்கு உட்படுத்தியதில் பஸ்ஸில் பயணித்தவர்களில் பலர் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை உறுதிப்படுத்தத் தவறியுள்ளனர்.


இதனையடுத்து அத்தியாவசிய தேவைகளின்றிய பயணிகளை ஏற்றிச் சென்றதாக பஸ் ஈரப்பெரியகுளத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டது.


இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் தொடருந்து சேவைகளில் பயணிப்போர் தமது கடமை அலுவலக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவ தேவைகளுக்குப் பயணிப்போர் அதுதொடர்பான ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment