Sponsor

Saturday, August 14, 2021

யாழ் யுவதி கொலை தொடர்பில் வெளியாகும் பகீர் தகவல்கள்; ஆறு வருடங்கள் பின் சிக்கிய கொடூரன்!

 


யாழ்ப்பாணம் கோண்டாவிலை சேர்ந்த 20 வயதான பரமேஸ்வரன் சஜிந்திகாவும், அவரது 6 மாத குழந்தையும் கொலை செய்யப்பட்ட விவகாரம் பல தொடர்பில்  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா கோவில்புதுக்குளத்தில் வசிக்கும் 28 வயது மனோராஜ் கடந்தவாரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.  


கடந்த 2015 ஓகஸ்ட் 9ஆம் திகதி இரவு 9 மணியளவில் சஜிந்திகாவும், 6 வயது மகளும் கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்ட சந்தேக நபர் கொலைக்கான காரணங்களையும், சம்பவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.


யாழ்ப்பாணம், கோண்டாவிலை சேர்ந்தவர் பரமேஸ்வரன் சஜிந்திகா. 2014ஆம் ஆண்டின் காலகட்டத்தில், வடக்கு புகையிரத மார்க்க புனரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தன. இந்த பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தக்குழு ஒன்று கோண்டாவிலில் தங்கியிருந்தபோது அக் குழுவில் வவுனியாவை சேர்ந்த 21 வயதான மனோராஜூம் இருந்தார்.


கோண்டாவிலில் பணிபுரிந்த போது, வீதியில் செல்லும் சஜிந்திகாவிற்கு பகிடி விட்டு போன் நம்பர் கொடுத்து காதல் மலர்ந்தபோது தாம் கர்ப்பமான விடயத்தை தெரிந்து கொண்ட சஜிந்திகா, அதை காதலனிடம் கூறி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அப்பொழுதுதான், காதலனின் சுயரூபம் அவருக்கு புரிந்து அதிர்ச்சியடைந்த நிலையில் இந்த விடயம் வீட்டுக்கு தெரிய வந்தது.


இந்நிலையில் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பிணியான மகளால் ஏற்படப் போகும் சமூக அவமானம் என சமூகத்தின் பேச்சுக்களுக்கு பயந்த பெற்றோர், கிளிநொச்சியிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் சஜிந்திகாவை தங்க வைத்தனர்.


அங்கு அவருக்கு பிரசவமானது. இந்நிலையில் வவுனியாவிலுள்ள மனோராஜூடனும், உறவினர்களுடனும் சஜிந்திகா, பெற்றோர் தரப்பினர் தொடர்ந்து பேசியபோதும் பலனில்லை. இதனையடுத்து ஒருநாள் தனது தந்தையையும் அழைத்துக் கொண்டு, வவுனியாவிலுள்ள மனோராஜின் வீட்டுக்கு சஜிந்திகா சென்றார்.


அவர்களிடம் தனது காதல் கதையை கூறி, தனது குழந்தைக்கு மனோராஜே தந்தையென்பதை கூறியுள்ளார். எனினும் மனோராஜ் வீட்டார் அந்த கதையை கேட்க தயாராக இருக்கவில்லை. அதோடு இந்த கதையையெல்லாம் எங்களிடம் வந்து சொல்ல வேண்டாம். வேறெங்காவது போய் கூறிக்கொள்ளுங்கள் என முகத்திலடித்தாற் போல சொல்லியனுப்பி விட்டனர்.


இதையடுத்து, சஜிந்திகா வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடு பதிவு செய்தார். பொலிசார் மனோராஜை அழைத்து விசாரித்த நிலையில் சஜிந்திகாவை ஏமாற்ற முடியாதென்பதை தெரிந்து கொண்ட மனோராஜ், அவரையே திருமணம் செய்வதாக கூறியுள்ளார். தொடர்ந்து , சஜிந்திகாவும் குழந்தையும் கோண்டாவில் சென்றனர்.


பின்னர் கோண்டாவில் சென்ற மனோராஜ், வவுனியாவிற்கு சஜிந்திகாவை அழைத்து செல்வதாகவும், அங்கு திருமணம் செய்வதாகவும் கூறினார். திருமணம் செய்து ஒரு கணவனாக தமது மகளை நன்றாக கவனித்துக் கொள்வார் என நம்பி, சஜிந்திகாவை காதலனிடம் ஒப்படைத்தனர் அவரது பெற்றோர்.


2015 ஓகஸ்ட் 9ஆம் திகதி மாலை மனோராஜ்- சஜிந்திகா, 6 மாத குழந்தையும் யாழ் நகரிலிருந்து பேருந்தில் வவுனியாவிற்கு புறப்பட்டனர். வவுனியா நகரத்தில் அவர்கள் பேருந்திலிருந்து இறங்கியதும், மனோராஜ் ஒரு கடையில் ஒரு பொரிஅரிசி பக்கெட், இரண்டு பியர், சிகரெட் மற்றும் மூன்று மெழுகுவர்த்திகளை வாங்கி அங்கிருந்து, வவுனியா, முருகனூரில் உள்ள ஆட்களற்ற வீடொன்றிற்கு சென்றனர்.


அதுவும் மனோராஜ் குடும்பத்துடன் தொடர்புடைய வீடுதான். அங்கு மின்சார இணைப்பு இல்லை. இதனால் 3 மெழுகுவர்த்திகள் வாங்கியிருந்தார். இரவில் அந்த வீட்டுக்குள் நுழைந்த சஜிந்திகாவிற்கு ஏமாற்றம். குடும்பத்தை தங்க வைக்க முறையான ஏற்பாடு எதுவுமின்றி மனோராஜ் அழைத்துவந்ததை புரிந்து கொண்டார்.


தரையில் ஒரு பெட்சீற் விரிக்கப்பட்டு, குழந்தை படுக்க வைக்கப்பட்டது. அதன்பின்னர் மனோராஜ் பியர் குடித்தார். இரவு உணவாக பொரி அரசி மாவை மனைவியுடன் பகிர்ந்து கொள்ள தயாரான போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். மனைவியை அடித்த சமயத்தில் அவரது காலில் குழந்தை மிதிபட்டுள்ளது. அதை கவனிக்கும் மனோநிலையில் மனோராஜ் இருக்கவில்லை. மனைவி மீதான வெறுப்பும், மதுபோதையுமே நிறைந்திருந்தது.


இந்நிலையில் சஜிந்திகாவை கொல்வதற்காகத்தான் திட்டமிட்டு அந்த வீட்டிற்கு மனோராஜ் அழைத்து வந்தாரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சஜிந்திகா கொல்லப்பட்ட பின்னர், வீட்டிலிருந்து 20 மீட்டர் தொலைவில் உள்ள குப்பை குவியலில் கொண்டு சென்று வீசி மண்ணெண்ணெய், சீனி, மற்றும் தென்னம்மட்டைகள் போட்டு சஜிந்திகாவின் உடலுக்கு தீ வைத்தார்.


அந்த இரவில் கொடூர மிருகமாக செயற்பட்ட மனோராஜ் அடுத்து எடுத்த முடிவும் குரூரமானது. 6 மாத குழந்தையை அருகிலுள்ள சிவன் கோயில் வாசலில் வைத்து விட்டு வருவதென முடிவு செய்து குழந்தையை தூக்கிக் கொண்டு வீதிக்கு வந்து, முச்சக்கர வண்டியில் கோயிலுக்கு சென்றபோது இரவில் கைக்குழந்தையுடன் எங்கு செல்கிறீர்கள் என முச்சக்கர வண்டி சாரதி கேட்டுள்ளார்.


மனைவி சண்டையிட்டுக் கொண்டு சென்று விட்டார் அவரை பார்க்கச் செல்கிறேன் என சமாளித்துக் கொண்டார். முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கி கோயிலுக்கு நடந்து சென்றார். கோயில் வாசலில் குழந்தையை படுத்தும் போதுதான் கவனித்தார் குழந்தையிடமிருந்து எந்த அசைவுமில்லை. சத்தமும் இல்லை அதன் பின்னர் சந்தேகமடைந்து குழந்தையை பரிசோதித்தபோது குழந்தை உயிரிழந்திருந்தது.


பின்னர் குழந்தையை தூக்கிக் கொண்டு வீதிக்கு வந்த மனோராஜ், இன்னொரு முச்சக்கர வண்டியில் ஏறி முருகனூர் வீட்டுக்கு வந்தார். இதற்குள் சஜிந்திகாவின் உடல் பெருமளவில் எரிந்திருந்த நிலையில் அதே நெருப்பில் குழந்தையையும் வீசினார் அந்த கொடூர தந்தை. அந்த வீட்டிலேயே சிறிதுநேரம் மனோராஜ் தங்கியிருந்து மனைவி, பிள்ளையின் உடல்கள் எரிந்ததும், அவற்றின் எச்சங்களை நிலத்தில் புதைத்த பின்னர் வவுனியா நகரத்திற்கு சென்று நள்ளிரவிலேயே கொழும்பிற்கு புறப்பட்டார்.


கொழும்பில் சில நாட்கள் தங்கியிருந்த பின்னர், வவுனியாவிலுள்ள தாயார் வீட்டுக்கு திரும்பி வந்தார். அதன் பின்னர் பேருந்து நடத்துனராக பணிபுரிந்தார். எனினும் வவுனியாவில் தங்குவதை குறைத்துக் கொண்டார். இதற்குள், சஜிந்திகாவை தொடர்பு கொள்ள பெற்றோர் முயன்றபோது முடியவில்லை. மனோராஜூம் பதிலளிப்பதில்லை என்பதுடன் அவர் வேறொரு இலக்கத்திற்கு மாறி விட்டார்.


சஜிந்திகாவிற்கு என்ன நடந்ததென்பதை தெரியாத பெற்றோர், வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதுடன் மனோராஜூடனான உறவு குறித்தும் குறிப்பிட்டனர். இதையடுத்து, வவுனியா பொலிசார் மனோராஜை விசாரணைக்கு அழைத்தபோது மனோராஜ் ஏதுவும் அறியாத அப்பாவியை போல நடித்து எல்லோரையும் ஏமாற்றினார்.


“நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு பேருந்தில் வந்து கொண்டிருந்த போது, என்னுடன் சண்டையிட்ட சஜிந்திகா, கிளிநொச்சியில் பேருந்தில் இருந்து இறங்கிச் சென்று விட்டார். அவருக்கு கிளிநொச்சியில் ஒரு தொடர்பு இருக்க வேண்டும்“ என அப்பாவியாக கூறினார். அதற்கு மேல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை சஜிந்திகா கிளிநொச்சியில் எங்காவது, தனியாகவோ, கூட்டாகவோ வாழ்கிறார் என எல்லோரும் நினைத்தனர்.


மனோராஜ் பேருந்து நடத்துனராக பணியாற்றிய பின்னர் இரண்டு முறை டுபாய்க்கு சென்று வந்தார். இந்த நிலையில் தான் கடந்த ஆண்டு, தலைமை ஆய்வாளர் அசங்க இந்துனில் வவுனியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் புதிய OIC ஆக நியமிக்கப்பட்டார். வவுனியா எஸ்எஸ்பி திஸ்ஸ லால், சஜிந்திகா காணாமல் போனது தொடர்பாக ஒரு விரிவான விசாரணையை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.


அதன்படி, டிஐஜி லால் செனவிரத்ன மற்றும் வவுனியா பிரிவு பொறுப்பாளர் எஸ்எஸ்பி திஸ்ஸ லால் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், வட மாகாணத்தின் பொறுப்பான மூத்த டிஐஜி ஜெகத் பலிஹக்காரவின் மேற்பார்வையின் கீழ், வவுனியா பொலிசார் முழுமையான விசாரணையைத் தொடங்கினர். அதன் முதற்கட்டமாக சஜிந்திகாவின் தொலைபேசி இலக்கத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட போது சஜிந்திகா பயன்படுத்திய தொலைபேசியை பொலிசார் அடையாளம் கண்டனர்.


அனுராதபுரத்தில் வெல்டிங் வேலை செய்யும் ஒரு தமிழர் அதை பாவித்து வந்தார். அவரிடம் விசாரித்ததில், அவர் வேறொருவரிடம் தொலைபேசியை வாங்கியது தெரிய வந்தது. அந்த நபரிடம் விசாரித்தால், அவர் இன்னொருவரை கைகாட்டினார். இப்படியே சங்கிலி கோர்வையாக பல கைகள் காட்டப்பட்டு, இறுதியில் அது மனோராஜில் போய் நின்றது. சஜிந்திகாவை கொன்று விட்டு, அவரது தொலைபேசியுடன் கொழும்பு சென்ற மனோராஜ், இரண்டு நாளில் திரும்பி வந்த போது, வவுனியாவில் ஒருவரிடம் தொலைபேசியை விற்பனை செய்துள்ளார்.


அவர் இன்னொருவரிற்கு விற்க, இப்படியே பல கை மாறி, இறுதியில் அனுராதபுரத்தில் வெல்டிங் வேலை செய்பவரிடம் அந்த தொலைபேசி இருந்துள்ளது. தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கை, தடயங்களின் அடிப்படையில் 7ஆம் திகதி அதிகாலை மனோராஜ் கைது செய்யப்பட்டார். கொழும்பில் வசித்த அவர் மிக அரிதாகவே வவுனியா வந்தார்.


 வவுனியாவில் ஒரு இடத்தில் அவர் மது அருந்திக் கொண்டிருந்த போது, பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போது, ஆரம்பத்தில் பாடிய அதே பல்லவியையே பாட முயன்ற நிலையில் பொலிசாரிடம் போதுமான ஆதாரங்கள் இருந்தன. அதனால் அவர் விரைவிலேயே உண்மையை கக்க வேண்டியிருந்த நிலையில், 6 வருடங்களாக நீடித்த மர்மத்தின் முடிச்சை வவுனியா பொலிசார் கடந்த வாரம் அவிழ்த்தனர்.


ஒரு கொடூரகொலையை செய்துவிட்டு சமூகத்தில் நல்லவனாக நடமாடிய ஒரு அயோக்கியன், நீதியின் கரங்களுக்கு முன் நிறுத்தப்படும்போது சட்டம் அவனை தண்டித்தால் மட்டுமே உயிரிழந்த சஜிந்திகா மற்றும் குழந்தையின் ஆத்மாக்களுக்கு சாந்தி கிடைக்கும்.    


No comments:

Post a Comment