Sponsor

Sunday, February 28, 2021

பௌத்த அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் முயற்சி செய்கிறது – நாலக தேரர் சந்தேகம்



 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் ஊடாக தேசிய பௌத்த அமைப்புக்களைத் தடை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறதா என தேசிய ஒருங்கமைப்பு அமைப்பின் செயலாளர் பெங்கமுவே நாலக தேரர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

தேசிய ஒருங்கமைப்பு அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முழுமையற்ற அறிக்கையினை சமர்ப்பித்துள்ளது. குறித்த அறிக்கை பௌத்த அமைப்புக்கள் நாட்டில் அடிப்படைவாதத்தை தூண்டுகிறது என்ற தவறான நிலைப்பாட்டை சமூகத்தின் மத்தியில் தோற்றுவித்துள்ளது.

குண்டுத்தாக்குதல் சம்பவத்தை திட்டமிட்டது யார் என்ற உண்மை காரணியை ஆணைக்குழு பகிரங்கப்படுத்தவில்லை. இதனை அறிக்கையின் பிரதான குறைப்பாடாக கருத வேண்டும். நாட்டு மக்கள் எதிர்பார்த்த புதிய விடயங்கள் ஏதும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை.

விசாரணை அறிக்கை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பௌத்த அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்ய முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டில் பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படைவாதத்துக்கு எதிராக பௌத்த அமைப்புக்கள் செயற்பட்டுள்ளன. இதனை தவறு என்று குறிப்பிட முடியாது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான உண்மை தன்மையினை அரசாங்கம் பொறுப்புடன் வெளிப்படுத்த வேண்டும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிற்கு எதிராக பௌத்த தேரர்கள் அனைவரும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம். இவ்விடயம் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்” என அவர் மேலும் என்றார்.

No comments:

Post a Comment