Sponsor

Friday, February 19, 2021

மன்னாரில் இதுவரை 233 பேருக்கு கொரோனா!

மன்னாரில் இதுவரை 233பேர், கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.



மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது வைத்தியர் ரி.வினோதன் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னார் மாவட்டத்தில் நேற்று மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இவர் மன்னார் நகர் பகுதியில், சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றில் கடமையாற்றி வருகின்ற நிலையில், இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையின்போது கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இவருடன் சேர்த்து பெப்ரவரி மாதம் மாத்திரம் 51 பேர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டனர். மேலும், மாவட்டத்தில் தற்போது வரை 233பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மன்னார் மாவட்டத்தில் குறைவடைந்துள்ளது.


எனினும் கொரோனா தொற்று அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதினால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.


மேலும் இந்த மாதம் மொத்தமாக 1,454 பி.சி.ஆர்.பரிசோதனைகளும் தற்போது வரை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 82 பி.சி.ஆர்.பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


தடுப்பூசி செலுத்துவதன் 2 ஆவது கட்டமாக சமூகத்திற்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் மார்ச் முதலாம் வாரம் ஆரம்பிக்கப்படும்.


30 வயது தொடக்கம் 60 வயது வரை தொழில் செய்கின்ற அனைவருக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.


மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 1250 தடுப்பூசிகள் சுகாதார துறையினருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட பொலிஸாருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை அனைவரும் விரைவாக பெற்றுக்கொள்ள வேண்டும்.


சமூகத்தில் 85 சதவீதமான மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்வந்தால் எமது சமூகத்தில் இருந்து கொரோனா தொற்றுச் சங்கிலியை முழுமையாக உடைத்து கொரோனா தொற்றில் இருந்து இந்த மாவட்டத்தை முழுமையாக பாதுகாக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment