Sponsor

Monday, February 15, 2021

காதலர் தினத்தன்று தந்தையால் கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி சிறுமி : இரண்டு வருடங்களாக பதில் கிடைக்காத கேள்விகளுடன் தவிக்கும் தாய்..!

 


கனடாவில் இந்திய வம்சாவளியினரான சிறுமி ஒருத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலர் தினத்தன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அவளது தந்தையே அவளை சுட்டுக்கொன்றார்.

நேற்று ரியா ராஜ்குமார் என்ற அந்த குட்டி தேவதையின் பிறந்தநாள் என்னும் நிலையில் தன் செல்ல மகளை நினைவுகூரும் அவளது தாயான பிரியா ராம்தின், இன்றும் பதில் கிடைக்காத சில கேள்விகளுடன் போராடி வருவதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 14ஆம் திகதி, காதலர் தினம் மட்டுமல்ல, ரியாவுக்கும் அவளது தாய் பிரியாவுக்கும் அன்றுதான் பிறந்தநாள்.

தந்தையுடன் மகளை அனுப்பிவைத்துவிட்டு மகள் வருவாள் என காத்திருக்கும்போது, ரியாவின் தந்தையான ரூபேஷ் ராஜ்குமாரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. உன்னால் இனி ரியாவை பார்க்கவேமுடியாது என்கிறார் ராஜ்குமார்.

பதறிப்போன பிரியா, என்ன சொல்கிறீர்கள் என்று கேட்க, நான் அனுபவிக்கும் வலியையும் வேதனையையும் நீ இனி வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கப்போகிறாய், நானும் ரியாவும் என் தந்தையிடம் போகிறோம் என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை ராஜ்குமார் துண்டிக்க, திகைத்து நின்ற பிரியாவை ராஜ்குமாரின் தந்தை இறந்துபோன நினைவு சுரீரென தாக்க, பிள்ளையை அவர் கொலை செய்யப்போகிறார் என்பது புரியவே, உடனே காரில் ஏறி பொலிஸ் நிலையம் செல்கிறார் பிரியா.

பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட பொலிசார் ராஜ்குமார் வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கே அவர்கள் பார்த்தது ரியாவின் உயிரற்ற உடலைத்தான்.

ராஜ்குமாரின் தொலைபேசி அழைப்பு வந்தது மாலை 5.30 மணிக்கு, ஆனால் பொலிசார் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கும்போது மணி இரவு 11.00!

நள்ளிரவுக்குப் பின்தான் பொலிசார் ராஜ்குமாரைக் கண்டுபிடிக்கிறார்கள், ரியாவை சுட்டுக்கொன்றுவிட்டு தன்னைத்தான் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் அவரது உடலிலும் படுகாயங்களுடன் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் சில நாட்களுக்குள் உயிரிழக்கிறார்.

மகளையும் இழந்து, மகளைக் கொன்றவனும் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமலே இறந்துபோக, துக்கமும் கோபமுமாக குழம்பிப்போய் நிற்கிறார் பிரியா. பிரியாவின் கேள்விகள் சிலவற்றிற்கு இன்றும் பதிலில்லை.

தன் மகள் காணாமல் போன உடன் ஏன் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை, பொலிசார் ஏன் அவரது வீட்டுக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்லவில்லை, அவர் ஏன் மகளை கொலை செய்தார், மருத்துவமனையில் இருக்கும்போது பொலிசாரிடம் ஏதாவது கூறினாரா என பல கேள்விகளுக்கு இன்றுவரை பதிலில்லை.

ஏற்கனவே ராஜ்குமார் பிரியாவை தாக்கியிருக்கிறார், ஆனாலும் அவர் குழந்தையை சந்திக்க பிரியா அனுமதி மறுத்ததேயில்லை, அப்படியிருந்தும் பெற்ற மகளை கொடூரமாக சுட்டுக்கொன்றிருக்கிறார் அவர்.

இப்படிப்பட்டவர்களை திருத்திவிடமுடியும் என்று நாம் நினைக்கிறோம், ஆனால் அது முடியாது என்கிறார் பிரியா. அவர் கைகளில் மகளின் புகைப்படம், முகத்தில் ஆறாத துக்கம்…

No comments:

Post a Comment