இலங்கையில் தற்சமயம் கொள்ளைச் சம்பவங்கள் பல இடங்களிலும் பதிவாகிவருகின்றமையால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன எச்சரித்துள்ளார்.
குறிப்பாக பெண்களை இதுதொடர்பில் உரிய அவதானம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
திட்டமிட்ட கொள்ளைக் கும்பல்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களும் தங்க சங்கிலிகள் கொள்ளையிடும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக சுட்டிக்காட்டினார்.
இதன்படி நேற்றையதினம் வெவ்வேறு பகுதிகளில் தங்க சங்கிலி அறுக்கும் கொள்ளைச் சம்பவங்கள் மூன்று பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.
ஹபராதுவ, கட்டுநாயக்க மற்றும் கோமரங்கடவல ஆகிய பிரதேசங்களிலேயே இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றார்.
கொள்ளையர்கள் கடைகளுக்கருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்துவதைப் போன்றும், யாருக்காகவேனும் காத்திருப்பதைப் போன்றும், பஸ் தரிப்பிடங்களில் நிற்பதுபோன்றும் கொள்ளையடிப்பதாக கூறிய அவர், சில கொள்ளையர்கள் பொலிஸ் வேடத்தில் வந்தும் கொள்ளையடிப்பதாக கூறியுள்ளார்.
இதனைக் கருத்திற்கொண்டு தனியாக வீதிகளில் செல்லும் பெண்களும், சன நடமாட்டம் குறைவான பிரதேசத்தில் செல்லும் பெண்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment