Sponsor

Saturday, February 20, 2021

பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசுவை கழுத்து நெரித்து கொன்ற பாட்டி!

 


மதுரையில் பிறந்து ஏழு நாட்களே ஆன பெண் குழந்தை மூச்சு திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பெண் சிசு கொலை குறைந்துள்ளது. ஆனால், அது முழுவதுமாக அழியவில்லை என்பதற்கு சான்றாக இப்போது மதுரையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டியில் வசிக்கும் விவசாயத் தொழிலாளி சின்னச்சாமி மாற்றம் அவரது மனைவி சிவபிரியங்காவுக்கு, 8 மற்றும் 3 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 10-ஆம் திகதி இந்த தம்பதிக்கு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அந்தக் குழந்தைக்கு பிப்ரவரி 17-ஆம் திகதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி பெற்றோர்கள் உசிலம்பட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதித்ததில் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் கூறிவிட்டனர்.

ஆனால் குழந்தையில் இறப்பில் சந்தேகமடைந்த மருத்துவர்கள், உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அப்போது, குழ்நதை இயற்கையாக இறக்கவில்லை என்றும், செயற்கையாக மூச்சு திணறடிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளது என மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.

இதனை பொலிஸுக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு தொடரப்பட்டு பெற்றோர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அப்போது, சின்னச்சாமியின் தாய் நாகம்மாள் (55) தான் குழந்தையை மூச்சடைக்க வைத்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

தம்பதிக்கு முன்னர் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு உடல்நலக் குறைபாடு இருப்பதாகவும், மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்ததால் ஆத்திரமடைந்ததாகவும், பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நேரத்தில் குழந்தையை அழுத்தியே கொன்றதாக விசாரணையில் நாகம்மாள் கூறியுள்ளார். பின்னர் பாட்டி நாகம்மாள் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குழந்தையின் பெற்றோரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பிறந்து 7 நாளே ஆன பெண் சிசு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் மதுரையில் 4 பெண் சிசு கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment