விடுமுறைக்கு ஊருக்கு சென்ற இடத்தில் விவசாயி போல டிராக்டரில் அமர்ந்து செல்பி எடுத்த விபரீத இளைஞர் ஒருவர், டிராக்டரை இயக்க முயன்றதால், டிராக்டருடன் 120 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன மேட்டூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கிருஷ்ணமூர்த்தியின் 20 வயது மகன் சஞ்சீவ். விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த சஞ்சீவ், மதிய உணவுக்கு பின்னர் வயல்காட்டு பக்கம் சென்றுள்ளார். அப்போது வயல் காட்டில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் ஏறி, தன்னை ஒரு மாடர்ன் விவசாயி போல நினைத்துக் கொண்டு டிராக்டரில் ஒய்யாரமகாக அமர்ந்து செல்பி எடுத்துள்ளார்.
தான் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது செல்போன் புரொபைலில் வைத்துள்ளார். பின்னர் தானும் டிராக்டர் ஓட்ட வேண்டும் என்ற விபரீத ஆசை சஞ்சீவிற்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக டிராக்டரை ஸ்டார்ட் செய்து இயக்கி உள்ளார். வயல்காட்டில் இயக்கிய வேகத்தில் தாறுமாறாக ஓடத்தொடங்கிய டிராக்டர் அருகில் உள்ள 120 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் பாய்ந்தது. சற்றும் எதிர்பாராத சஞ்சீவ் டிராக்டருடன் கிணற்றுக்குள் இழுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.
அவனது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். சஞ்சீவின் செல்போன் கிணற்றுக்கு வெளியே கிடந்துள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . கிணற்றுக்குள் சுமார் 35 அடி ஆழம் தண்ணீர் இருந்த நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி சஞ்சீவின் சடலத்தை மீட்டனர். டிராக்டருடன் விழுந்த வேகத்தில் சஞ்சீவ் நீருக்குள் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
சஞ்சீவின் சடலத்தை பிணகூறாய்வு செய்யாக்கூடாது என வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செல்பி ஆர்வத்தால் 20 வயது இளைஞர் விபரீத நடவடிக்கையில் இறங்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment